Monday 23 December 2013

உழுபவன் கணக்கு பார்க்கிறான்.....!



உலகில் ...
இன்று நடக்கும் அத்தனை வேறுபாடுகளுக்கும் ,
ஏற்றத்தாழ்வுகளுக்கும் ஆளும் அரசின் கொள்கைதான்
காரணம் என்று சொன்னால்..... முக நூலில் உள்ள நண்பர்கள்
பாதிபேருக்கு மேல் என்னை மேலும் கீழும் பார்த்து
இவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்றுதான் சொல்வார்கள்,
சொல்லிவிட்டு போகட்டும் !

        வீடியோ ...ஆடியோ உலகிலிருந்து வெளியே
வரும்போதுதான் அவர்களால் புரிந்துகொள்ள முடியும்.
அப்போதுதான் அவர்களால் படிக்க முடியும் .
படிக்க முடிந்தவர்களால்தான் முழுமையாய் .....
............. முழுமையாய் தெரிந்துகொள்ள முடியும் !
அதுவரை அவர்களுக்கு மட்டுமல்ல ....எல்லோருக்கும்
குழப்பம் நீடித்துக்கொண்டுதான் இருக்கும் .

விவசாயிகள் , உரம் -பூச்சுகொல்லி
மருந்துகளுக்கான விலை உயர்ந்துவிட்டதே .?..
அதை அரசு தடுக்கவில்லையே ?
என்று கவலைப்படவில்லை ....

மின்சார கட்டணம் உயர்ந்துவிட்டதால்
பாசனத்துக்காக கைகாசு கரைந்துவிட்டதே ?
என்று கவலைப்படவில்லை !

புயல் - மழை - வெள்ளம் இவை கடந்து
தான் விளைவித்த பொருளை அரசே !
கொள்முதல் செய் ! என்று கேட்க தயாராக
இல்லை ....

தான் விளைவித்த பொருளுக்கு
கட்டுபடியான விலை வேண்டும்
என்று ஒன்று சேர்ந்து போராடவில்லை ....

கூலிக்காரன் அதிகமாய் கூலி
கேட்பதால்தான்......?
தனக்கு நட்டம் ஏற்படுகிறது ...
என்று வாதிடுகிறான் !

இதில் உண்மை இருக்கா ?
கூலி கணக்கை போடவேண்டாமா ?

இன்றைய விவசாயம் ...!
பெரும்பாலும் 2 போகம்தான் .
ஆண்டுக்கு 3 போகம் என்று
வைத்துக்கொண்டாலும் ....
விவசாய கூலிக்கு எத்தனை நாட்கள்
விவசாயத்தில் வேலை கிடைக்கும் ?

ஒரு போகத்துக்கு அதிகபட்சம் 1 மாதம்
வேலை கிடைக்குமா ?
3 போகத்துக்கு 3 மாதங்கள் வேலை !
ஆகா மொத்தம் ஆண்டிற்கு 90 நாட்கள் வேலை 

ஒரு நாளைக்கு உங்கள் கணக்குப்படி
கூலி 400 ரூபாய் என்றால் ...?
90 நாளைக்கு 36000 ஆயிரம் ரூபாய்கள் ...!
ஆண்டுக்கு 365 நாட்களை
வகுத்தால் ஒரு நாளைக்கு 99 ரூபாய்
இதைக்கொண்டு ஒரு நாள் ஓட்ட முடியுமா ?
100 ரூபாய்க்கும் குறைவாய் கிடைக்கும்
விவசாயத்தை நம்பி விவசாயக்கூலி வாழ
முடியுமா ?

அதனால்தான் விவசாயக்கூலி
நகரத்தை நோக்கி ஓடுகிறான் .
ஓடி...கொத்தனார் ,சித்தாள் வேலை செய்கிறான் .
அதில் ஒரு நாளைக்கு 500--600 ரூபாய்க்கு மேல்
கிடைகிறது !
வெய்யல் இல்லை .... மழை இல்லை ...
புழுதி இல்லை ... வைக்கோல் சுனை இல்லை !

இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல்
விவசாயி .... விவசாய கூலியை
முறைக்கிறான் .....

விவசாயக்கூலி அறுவடை எந்திரத்தை
தடுத்துவிட்டு ....
விவசாயியை முறைக்கிறான் !

இவர்கள் இருவரும்
முறைக்கவேண்டிய இடம்
எது ?
ஆளும் அரசாங்கம் !
அரசின் கொள்கை ! !
விவசாயம் சார்ந்து அரசின் கொள்கையில்
மாற்றம் வேண்டும் ....
விவசாயத்தை தொழிலாக
அங்கீகரிக்க வேண்டும் ! 

விவசாயக்கூலிகளுக்கு
விலைவாசிக்கேற்ப
கூலிச்சட்டத்தில் மாற்றம் வேண்டும் !

இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் .....
விவசாயக்கூலிகள் ......
அம்மா பசிக்குதுன்னு
விவசாயிங்க வீட்டு வாசலை
கட்டி அழவேண்டுமாம் !

அதுவரை விவசாயம் செய்ய மாட்டார்களாம்...?
விவசாயிகள் !
என்னே தொலை நோக்கு !
வாழ்க படிப்பாளிகள் !!
வளர்க விவசாயம் ! ! !

Sunday 22 December 2013

மரியாதைக்குரியவர்களுக்கு ....!



சில கருத்துக்கு பதில் சொல்லாமல் விட்டுவிடவே
நினைகின்றேன் .அப்படி விட்டுவிடுவதும் உண்டு ..
அப்படியே விட்டுவிட்டாலும் ...பதிவைபோட்டவர்கள்
விடுவாதாய் இல்லைஎன்பதுபோல...
தொடர்ந்து பதிவைப்போட்டுக்கொண்டே இருக்கும்போது வேறு வழியின்றி ,
அதற்கு மறுமொழி சொல்லவேண்டி இருக்கிறது !

அதுவும் ....
என் மரியாதைக்குரியவர்களே
இப்படி செய்யும் போது ....
என்ன செய்வதென்றே புரிவதில்லை ! 
என்னுடைய பதிவால் அவர்களின்
மனம் புண்பட்டு ... நட்பு வட்டத்திலிருந்து வெளியே
போய்விடுவார்களோ ?
இல்லை தம்மை இழிவு படுத்துவதாக நினைப்பார்களோ ? என்ற
மனப்போராட்டத்துக்கு பிறகே இதை பதிகிறேன் .

எது ஆனாலும்
சரியானதை சொல்லியே தீரவேண்டும் !
என்ற தீர்மானகரமான முடிவின் படியே இதை
பதிவு செய்கிறேன் .

குறிப்பாய் பெண், பெண்ணியம் பற்றி ....
பெண்ணுரிமை பற்றி ....
ஒரு சில ஆண்கள் எழுதும்
கண்ணியக்குறைவான செய்திகளைபதிவிடும்போது ....

மதம் சார்ந்து முட்டாள்தனமான வக்காலத்தும் ,
அதீதமான மதகட்டுப்பாடுகளை அரசியலாக்கவேண்டும்
என்ற மத வெறி குறித்த செய்திகளை பகிரும்போதும் ....

மூன்றாம் பாலினம் தொடர்பாக அடிப்படை
விஞ்ஞான அறிவு கூடஇல்லாமல் ...வாய்கிழிய
வசைபாடி பதிவுகள் பகிரும்போது ....

குடிப்பதும் ,கும்மாளமிடுவது பொதுமைபடுத்தி ,
பிறரின் மதிப்பீடுகளை கேட்பதுப்போல
மறைக்கப்பட்டிருக்கும் அசிங்கத்தை  கிளறி,
தமது தப்புக்களுக்கான அங்கீகாரத்தை பெற
முயலும் ...பதிவுகளை பதிவிடும்போது .....

முதலாளிகளின் ...விவசாயிகளின் பாதிப்புக்கு
தொழிலாளியின் கூலிதான் காரணம் என்று
கோணியில் கல்லைக்கட்டி அடிக்கும் ....
கோமாளித்தனமான பதிவுகளை பதிவிடும்போது ....
சகித்துக்கொள்ள முடிவதில்லை !

எல்லாவற்றிற்கும் வக்காலத்தல்ல,
நான் சொல்வதே வேத வாக்குமல்ல ...
எல்லாவற்றிக்கும் விடை இருக்கிறது
விஞ்ஞானத்தில் ......
விஞ்ஞான கண்ணோட்டத்தில்
இந்த சமூகத்தை பார்க்கும்போது
எல்லாம் புலப்படும் ...எளிதில் புரியும் !

அதுவரை ...
எல்லாமே புரியாத புதிர்தான் !